பள்ளிக்கொடம் (பள்ளிக்கூடம்)
பள்ளிக்கொடம் (
கடந்த அரைநூற்றாண்டுகளின்
துவக்கத்தில் அரசபள்ளிகளாக
விளங்கிய அரசுஆரம்ப்ப்பள்ளிகளில்
பயணித்த நினைவுகளை
மண்மணக்கும் குமரியின்
வட்டார வழக்கியல் மொழியில்
வாசியுங்கள்..............
லிங்கில் சென்று உங்கள்
கமெண்ட்ஸ்ஐ பதிவு செய்யுங்கள்
மாறா அன்புடன்
வைத்தியர்மகன் வே. ஆறுமுகவேலப்பன்
நல்ல நாள் பாத்து சாமிவீட்ல விளக்குவச்சி சாமிகும்பிட்டுகிட்டு, நல்லப்பம் ( முதன்முதலாக ) பள்ளிக்கொடத்துல சேக்க புதுநிக்கர், புதுசட்ட, பாவாட, சட்ட போட்டுக்கிட்டு சூரப்பள்ளம் பள்ளிகொடத்துக்கு அப்பாமாரோடு ஐயாவும், சம்முவமும் கிளம்புனாவ. அங்க பாத்தா நெறய புள்ளயளும், பயலுவளும் வந்திருந்தாவ. கெட்மாஸ்டர் ரூமுல புதூர் வாத்தியார் செயர்ல இருந்தாரு. வேற வேற செயரில் மூணு வாத்தியாரும் இருந்தாவ. எங்கபேரு, அப்பாபேரு எல்லாம் கேட்டு எழுதிகிட்டு பிறந்த நாளு எதுண்ணி கேட்டா ஐயாவுக்க
அப்பாகொண்டுவந்திருந்த ஜாதகத்தை(ஓலைச்சுவடி) எடுத்து குடுத்ததும் பிறந்தநாள் மாசம் வருசம் எல்லாம் எழுதிகிட்டு இங்கீலீஸ் தேதிக்கு மாத்தி போட்டுகிட்டார். சம்முவத்துக்கு யாதவம்(ஜாதகம்) இல்லை, சின்ன பையனாஇல்ல இருக்கான்?என்று சொல்லிகிட்டே, வலதுகையை தலையைசுத்தி இடதுகாத தொடசொன்னார். சம்முவம் எத்தி, எத்தி பார்த்தான் முடியல்லை. மூத்தவாத்தியார் ஒருவருசம் வீட்டிலகிடக்கட்டாம், மறுவருசம் சேப்போம் என்றார். சம்முவத்துக்க அப்பா ஐயோ இவன் உபத்திரவம் தாங்கமுடியல வாத்தியார எப்படியாவது சேத்துருங்க...ண்ணதும், வாத்தியாரு சம்முவத்துகிட்ட இடக்கையை தூக்கி தலையை சுத்தி வலதுகாத தொடசொன்னார். எப்படியோ தக்கிமுக்கி தொட்டுட்டான். பெரும்பாலும் எல்லா புள்ளயளுக்கும் மூத்தவாத்தியார் அஞ்சுவயசு முடிஞ்சி ஆறுவயசு மே, ஜூன் மாசம் பிறக்குயதுமாதிரி பிறந்தநாள் அவரே போட்டுகிடுவாரு. பிற்காலத்துல சிலருக்கு லாபமா இருக்கும் சிலருக்கு நட்டமா இருக்கும். இப்போ கோர்ட்டுல போட்டுல்ல வயச குறச்சி பிறந்தநாள் சர்டிபிகேட் வாங்கிப்பிடுயாவ.
முந்தி வாத்தியாரு போட்டதுதான் தலைஎழுத்து.
சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே, திருகொச்சி அரசுக்கு அம்பதுசென்ட் பூமியை பள்ளிக்கொடம் கட்ட தானமா கொடுத்தார் சூரப்பள்ளம் மார்த்தாண்டம்பிள்ளை. சுத்தும் முத்தும் நாடாக்கமாரு பூமியளா இருந்தாலும் குடுக்க (கொடுக்க) மனம் வரணுமில்லியா?
தெக்கோமா கல்லுசுவருக்கு மேல, பனங்கம்புல ஓடு பாவுன கட்டடம். புதூர் தாணுமாலைய பெருமாள் (மூத்த வாத்தியார்) கெட்மாஸ்டர், பேயோடு தங்கையாவாத்தியார், தவசிமுத்துவாத்தியார், ஈத்தாமொழி பிரம்மமுத்துவாத்தியாரு, லீலாவதிடீச்சர்.
அஞ்சாம் வகுப்பு வர உண்டு. சுத்தி ஒரே கொல்லாங்காடு(முந்திரிகாடு) தண்ணி தயவில்லாத பொட்டல்காடு. பள்ளிக்கொடத்துக்கு முன்ன ஒரு பெரிய வேப்பமரம். வேப்பமரத்துல இருந்து விழுய பழத்த எடுத்து பிசுக்கி கொட்டைய நல்லா சூப்பிட்டு போட்டதும், கறுத்த பெரிய எறும்பு உருட்டி உருட்டி கொண்டுபோகும்.
சுந்தரமணி பூஞ்சட்ட கட்டைய ஒவ்வொருபக்கமும் துண்டுவிழாம முறிச்சி இடுக்குல(இடையில்) கறுத்த பெரிய எறும்பின் காலை உள்ளவச்சி நெருக்கிவிட்டா ஏர்மாடு நுகத்த இழுக்குயது மாதிரி இழுத்துப்போறத பாத்து கைதட்டி சிரிப்பான்.
புதுமடம், சூரப்பள்ளம், புதூர் ஊருல உள்ள சின்னபுள்ளைங்க பள்ளிக்கொடத்துக்கு, நிக்கர், சட்ட, பாவாட, சட்ட போட்டுகிட்டு தோளுல துணிப்பை, துணிப்பைக்குள்ள சிலேட், குச்சிடப்பா, அலுமினியபிளேட் நோட், புக் இருக்கும். புதூர்ல இருந்து சம்முவம் ஐயாவு, நாவமணி, புள்ளையளுவ எல்லாம் சேர்ந்து கதபேசிபேசி வருவாவ. குறுக்கு வழியா போனா சீக்கிரம் போயிரலாம். ஆனா வயக்காடு முச்சூடும் தொழிகலக்கி வரப்பு தொழியா இருக்கும். கால்வாயில தண்ணி போய்கிட்டிருக்கும். பள்ளிப்புள்ளையளுவ வழுக்கி விழுந்திராம இருக்க, யாராவது குறுக்கோடி போறத மூத்த வாத்தியாரு அறிஞ்சா குண்டிதோல உரிச்சிபுடுவாரு. ஐயாவும், சம்முவமும் ஆத்தங்கரையோட நடந்துவந்து கையிலை இருக்க வெங்கலதூக்குவாளிய, சூரப்பள்ளம் நார்ணப்பெருமா (நாராயணப்பெருமாள்) வீட்டில், நாலுகட்டு திண்ணையில் பத்தாயத்துக்கு பக்கத்தில் வச்சிகிட்டு கூட்டத்தோடகூட்டமா பள்ளிக்கொடத்துக்கு போறது வழக்கம். பையை கொண்டு கிளாஸ்ரூம்ல வச்சிகிட்டு வெளியவந்து வேப்பமூட்டுல ஒரேஆட்டம்தான்.
தவசிமுத்து வாத்தியாரும், தங்கையாவாத்தியாரும் ராலிசைக்கிளில் வந்து இறங்குனதும் ஆட்டம் குறைந்தது. ஈத்தாமொழி வாத்தியாரும் ஹம்பர் சைகிள்ல வந்து இறங்கினாரு. லீலா டீச்சர்தான் பாவம். ராஜக்கமங்கலத்தில் இறங்கி நடையா நடந்துவாறதுக்கு கொஞ்சம் பிந்தும். புதூர் வாத்தியாரு கண்ணு உருட்டலேபாத்தே கந்தர்கோலமா ஆயிரும். பள்ளிப்புள்ளையளுவ ஒவ்வொருத்தர பத்தியும் மூத்தவாத்தியாரு சரியா தெரிஞ்சி வச்சிருப்பாரு. ஏதாவது தப்புதண்டா பண்ணுனா கொய்யாகம்ப எடுத்துட்டுவந்து சுளீர்சுளீர் என்று விளாசி தள்ளுவாரு. பிள்ளயளுக்கு அவர கண்டாலே கொலநடுக்கம் தான்.
பள்ளிகொடத்துக்குமுன்னால செம்மண்தரையில வரிசையா பத்துநேர்கோடு கொத்திப்போட்டிருக்கும். காலையில மணியடிச்சதும் இரண்டு கோட்டினுள் வகுப்பு வாரியா வரிசையா அஞ்சுவரிசையில மாணவமாணவிகள் நிக்கணும். கொடியேற்றி உறுதிமொழி எடுத்துமுடிஞ்சதும் அவரவர் வகுப்பறைக்கு போகணும். வரிசையா
கட்ட மரபெஞ்ச் இருக்கும். அதுலபோய் அமைதியா இருக்கணும். வாத்தியாருக்கு டேபிள் செயர் இருக்கும். பெரிய கரும்பலகை முக்காலியில் நிறுத்தப்பட்டிருக்கும். போடு அளிக்க டஸ்டர்
துணியில தச்சி கொண்டு சீதாராமன் கொடுப்பான். அவனுக்க அப்பா வீரமணி டெயிலர்கட போட்டுருக்கார்.
வாத்தியாரு ஆசர்டாப்போடு வந்து உட்கார்ந்து ஒவ்வொரு பேரா வாசித்ததும் எழும்பி நின்னு ஆஜர் சார் என்று சொல்லணும். ஒருநாள் ஆஜர் சொல்லாம திமிருல இருந்த மூணாங்கிளாஸ் செல்லத்துரைய, வராந்தால நின்ன மூத்தவாத்தியாரு பாத்துட்டாரு. உள்ள வந்து பேயோடு வாத்தியாருகிட்ட அனுமதி வாங்கிட்டு செல்லதுரைக்க காத ரெண்டு முறுக்குமுறுக்கி, ரண்டுகாதையும் பிடுச்சி செல்லத்துரை ஆஜர், செல்லத்துரை ஆஜர் என்று நூறுதோப்புக்கரணம் போட சொல்லிட்டார். செல்லதுரைக்க பாடு வேர்த்து விறுவிறுத்து போச்சு. இன்னைக்கு செல்லத்துரையை பாத்தாலும் அழுதழுது செல்லத்துரை ஆஜர், செல்லத்துரை ஆஜர் என்று அவன் அழுது அழுதே தோப்புக்கரணம் போட்டதுதான் ஓர்மைக்கு (நினைவுக்கு) வரும்.
இந்த மானிட்டர்சம்முவம் பய ரொம்பமோசம். கொத்து கொத்தா காரங்காய் காய்ச்சி தொங்கும் காரமுள்செடியை பார்த்து நல்ல கம்பா வெட்டி முள்ளைசெருக்கி மஞ்சள்தடவி வெயில்ல காயப்போட்டு நாலு, அஞ்சு கம்புவள வாத்தியார்கிட்ட குடுத்துப்புடுவான். எப்படி அடிச்சாலும் கம்பு முறியாது. கொய்யாகம்பு கிடைச்சாலும் கொண்டு கொடுப்பான். ஒரு எழுத்தும் படிக்கமாட்டான். எடுபிடிவேலைக்கு ஒண்ணாநம்பர், ஆனா அவனுக்கு நல்லபேரு. ஏ! சம்முவம் கம்பு வேணும்ண்ணாலே ஒண்ணுக்கு மூணா கொண்டு கொடுப்பான்.
பதிணொன்ணேகாலுக்கு இடைவேளை மணியடிக்கும்ல், கக்கூசும் கிடையாது, கழிப்பறையும் கிடையாது, எல்லாம் வெளிய பாத்துக்கிடவேண்டியதுதான். மணியடிச்சதும் ஒரே ஒட்டமா ஓடி ஆத்துக்குள்ள தண்ணிய கலக்காமஇறங்கி, குனிஞ்சி வாயால உறிஞ்சி குடிக்கியதும் உண்டு, கையால அள்ளிக்குடிக்கியதும் உண்டு. பேச்சிபாறை அணையில இருந்து இடதுகரை கால்வாயின் ராஜாக்கமங்கலம் கிளை கால்வாயில் தண்ணீர் பன்னீர்துளியாய் போகும். மக்கள் தன்னையும் மண்ணையும் உயிராய் நேசித்தகாலம். செடி, செத்த, கழிவுகளை ஆத்துல போடவே மாட்டாவ. போட்டா ஆத்து வாச்சர் பிடிச்சிடுவான்.
ஒண்ணாம் கிளாஸ் முதல் மூணாங்கிளாஸ் வரை தமிழ் எழுத்துக்கள், எண்கள் பிழையில்லாம வடிவமா எழுதுய பயிற்சி. மரசட்டம் போட்ட சிலேட்டுல குச்சியால எழுதுயது பழக்கம். மூணாங்கிளாசுல இரட்டைவரி நோட்டுல தமிழ் எழுத்தும் நாலாங்கிளாசுல நாலுவரினோட்டுல ஆங்கில எழுத்து பயிற்ச்சியும் நடக்கும். ஒருவாத்தியாரும் செத்தநேரம் ஓய்வுஎடுக்கமுடியாது. மூத்தவாத்தியாரு பருந்துபார்வையால கண்காணிப்பாரு. பள்ளிக் கொடத்துக்கு வந்து போறதுவர புள்ளையளுக்கு கண்டிப்பு, படிப்பு, ஒழுக்கம். இத தாண்டி யோசித்து பாக்கவே முடியாது.
சிலேட்டுல எழுதுயதுக்கு, சிலேட்டுகுச்சி, மாகுச்சி, உருண்டகுச்சி, கடல்குச்சி என பல இருந்தாலும் குச்சியல்லாம் குட்டிகுட்டியாத்தான் (நீளம்குறைவாக) இருக்கும். சிலேட்டுல எழுதுனத அழிக்க நவரபச்சல, வாழைபச்சல, முள்ளுஎடுத்த சீமைக்கள்ளி, கணவாமீனுக்க நாக்கு இப்படி விதவிதமா வச்சிக்கிட்டு ஒருத்தருக்கொருத்தர் குச்சிகொடுத்து பச்சிலையும், பச்சிலை கொடுத்து கணவாநாக்கு துண்டும் பரிமாறுவது வழக்கம். ஒண்ணுக்கும் வழியில்லாதவன் எச்சில்துப்பலிட்டு அழிப்பான்.
நாலாங்கிளாஸ் போனதும் பென்சிலும், ரப்பரும் கொண்டுவரச் சொல்லுவாரு. புது பென்சில பார்க்கிறது அபூர்வம். வீட்டுல அண்ணன் அக்கா பயன்படுத்தி போட்ட கட்ட பென்சில பேப்பர சுத்தி பவுண்டன்பேனாவுல மைஊத்துய அடிப்பகுதியில சொருகிவச்சி கைக்கு அடக்கமாக வச்சி எழுதுவது பழக்கமா போச்சி. புதுமடத்து விஜயகுமார் மட்டும் ஜாமிட்ரி பாக்ஸ்க்குள்ள பென்சில், ரப்பர், பவுண்டன்பென் எல்லாம் கொண்டுவருவான். யாரையும் தொடவிடமாட்டான். நாய்க்க பூழல்ல தேன் வடிஞ்சி என்ன? நக்கவா முடியும்!
அஞ்சாம் கிளாசுல பவுண்டன்பேனா கொண்டுவரச் சொல்லுவாரு வாத்தியாரு, பெரும்பாலும் பழைய பிரிபோன பேனாதான் எல்லாருகிட்டேயும் இருக்கும். மை லீக்காகி பெருவிரலும் ஆள்காட்டி விரலும் நீலமையில் ஊறிப்போகும். கையில மை படாம இருக்க பேப்பர சுத்திவச்சி பிடிச்சி எழுதியது உண்டு. லீக்காகும் பென்னின் பிரியில் நூலைசுத்தி டைட்டா வைக்கியதும், லீக்காகும் கேப்புல சோப்புத்துண்ட தேச்சுவைக்கியதுமா பெரும் போராட்டமாத்தான் இருக்கும். பென் நிப்புல அழுக்கேறி மை ஓட்டத்த தடுத்து எழுதாம இருந்தா வைகுண்டமணிக்கிட்ட இருக்கும் பிளேடால நிப்பையும் கட்டையையும் சேர்த்து ஒரு கீறு கீறிவிட்டால் பென்னு பழம்போல எழுதும். சமுத்திரக்கனிக்க பென் எழுதலைனா கோவத்துல பெஞ்சுல ஓங்கி ஒருகுத்து குத்துவான். நிப்பு வளைஞ்சி போகும். நிப்ப நிமிர்த்தி தரையில ராவி(உரசி) பாலிஷ் பண்ணுவான். ஒடிசலான எழுத்து எழுதின பென்னு இப்போ தடியான எழுத்தா எழுதும்.
மதியச்சாப்பாட்டு மணியடிச்சதும் பள்ளியில சாப்பிடுயதுவ அலுமினிய பிளேட்டும் கப்பும் எடுத்துட்டு போய் நீளவராந்தாவுல வரிசையா உட்காரும். வீட்டுக்கு போய் சாப்பிடப்போறவங்க ஒரே ஓட்டமா வீட்டுக்கு போவாவ. ஐயாவு, சம்முவம் உட்பட ஏழுபேரு நாராயணப்பெருமாள் வீட்டுக்கு போவோம். போய் நாலு கட்டுல இருக்க தூக்கு வாளிய எடுத்துட்டு போய் சுத்தியிருப்போம். நாராயணப் பெருமாள் இளைய மகன் ஜெயச்சந்திரன் ஒருசருவத்துல தண்ணியும், சின்ன செம்பும்கொண்டு தருவான். பாத்திரத்தை திறந்து உள்ள இருக்க கூட்டு தட்ட வெளிய எடுத்துவச்சி சாப்பிடும்போது ஒருத்தருக்குஒருத்தர் துவையல், கூட்டு, கொழம்பு, இதுகள மாறிமாறி பரிமாறிக்கிடுவோம். சாப்பிட்டுட்டு திருப்பி பள்ளிக்குவந்ததும், சுயம்புவும் பன்னீர் செல்வமும் தேக்கு இலையில மதிய சாப்பாடு கூட கொடுத்த மஞ்சமாவ ஐயாவுக்கும்சம்முவத்துக்கும் ஒளிச்சிக்கொண்டு [மறைத்து] குடுத்தான். மஞ்சமாவு ருசி நல்லாயிருந்தது, வாரத்துக்கு, இரண்டு நாள் மூணுமணிக்கு பால் பவுடர் [அமெரிக்க மாவு] காய்ச்சி வேப்பமூடுல வச்சி சமையல்கார பாக்கியம் ஆளூக்கு ஒரு கல் குடுப்பாவ. பாலுண்ணா அதுதான் பாலு... மணத்துக்கிட்டு இருக்கும்.
நண்பகல் உணவுதிட்டம் தனியார் பங்களிப்போடு நடந்தது. வயல்அறுப்படிப்பு நேரத்தில் ஒருஊருக்கு இருநாள்மூத்தவாத்தியாரும், மற்றவாத்தியார்களும் சம்முவம் உட்பட நாலஞ்சு பையன்மார்களும் வீடுவீடா போய் நெல் , தேங்காய், விறகு நன்கொடையாய் பெறுவது வழக்கம். வயல் அறுத்தடிச்சு பொலி அளக்கும் நேரம் இரண்டுமரக்கால் நெல் எடுத்துஒருநார் பெட்டியில் போட்டு வைப்பார்கள், வாத்தியாரு வசூலுக்கு வரும் போது உபசரிப்போட பையன்மார் வச்சிருக்க சாக்கில்பெட்டியிலுள்ள நெல் இடமாறும். சாக்கு நிறஞ்சதும் ஒரு வீட்டுல வச்சிக்கிட்டு அடுத்தவீட்டுப்பயணம் தொடரும். விளக்குவைக்கிய நேரத்துக்கு முன் அண்ணத்த(அன்றைய) வசூல நிறுத்திக்கிட்டு மறுநாள் அங்கஇருந்து தொடரும். இப்படி பூக்கு(ஓரு போகம்) ஏழுநாள் வசூலில் குறையாம ஏழுக்கோட்ட நெல்லும் நூத்துக்கு மேல் தேங்காயும் விறகும் வசூலாகும். இத மொத்தமா சக்கடவண்டியில ஏத்தி பள்ளிக்கொடத்துல கொண்டு கொடுப்பார் வண்டிக்கார மாடசாமி. அப்பப்போகுறுப்புமாரு [கிருஷ்ண வகை சமுதாயத்தினர்] தோட்டத்துல வெளைய்ய காய்கறிகள கொண்டு
பள்ளிகொடத்து பாக்கியத்திடம் இலவசமா குடுத்துட்டு போவாவ.
வெள்ளிக்கிழமை பள்ளிப்புள்ளய முகத்துல பயம் மறஞ்சிருக்கும். மூத்த வாத்தியாரு வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருக்கியதால, என்னதப்பு செஞ்சாலும் கம்பை தொடமாட்டாரு. பள்ளி வளாகத்துல
ஒட்டு மாவு, கொல்லாவு, தேக்கு, வேம்பு, என மரங்கள் நட்டுவளக்க
குண்டுகள் வெட்டி, நாலு பக்கமும் உயரமா வரப்பு அமைச்சி செடிகள நட்டு பயவள வச்சி ஆத்திலிருந்து தண்ணிஎடுத்துஊத்தி சோலைவனமா மாத்திட்டாரு. அப்பப்போ பக்கத்து வெளங்காட்டுல பயவள அனுப்பி ஆளாளுக்கு ஒருபிடி பூஞ்சட்டயை முறிச்சிட்டு வர சொல்லி, சமையல் பாக்கியத்துக்கிட்ட கொடுத்து, வகுப்புக்கு ஒரு
பூஞ்சட்ட விளக்குமாறு கொடுப்பாரு.
பயவளே வகுப்ப தூத்து சுத்தமா வச்சிருக்கணும்.
நாலாங்கிளாசுல தவசிமுத்துசார் கிளாஸ் நடத்திக்கிட்டு இருக்கச்சுல, கோவாலசாமி பாண்டியில உடங்காட்டுலமுயலுபிடிக்கியது, வெள்ளெலி பிடிக்கியத, கதைகதையா சொல்லிக்கிட்டிருந்தான். இளயருமா
(இளய பெருமாள்) ரசிச்சி கேட்டுக்கிட்டிருந்தான். இந்த எளவ
மூத்த வாத்தியாரு கண்டுகிட்டாரு, ரண்டு பேரையும் கெட் மாஸ்டர்ரூமுக்கு கூட்டிக்கிட்டுபோய் கம்ப ஒங்கியதும் பயத்துல கோபாலசாமி கழ கழா நிக்கரோட மோண்டுட்டான். ஒண்ணு போட்டு அவன விரட்டிட்டு , இளயருமா பக்கம்திரும்பினதும் ஒண்ணுவிடாம சொல்லிட்டான். வாத்தியாரு வகுப்புல சொல்லி குடுத்த பாடத்த கேட்டாரு, பேந்த பேந்தமுளிச்சான் இளயருமா. நீலநிற முரட்டுநிக்கர இழுத்து வச்சிக்கிட்டு, சம்முவம் கொண்டுகுடுத்த காரங்கம்ப வச்சி வீக்கு, வீக்குண்ணி வீக்கிட்டாரு. பய குய்யொமுறையோ ….ண்ணி அலறி சத்தம் போட்டான்.
சாயந்தரம் பெரிய முத்தத்துல, சின்னபிள்ளைகளின் விதவிதமான விளையாட்டு சத்தம் ஆக்ரோஷமா இருக்கும். மூத்தவாத்தியாரு கருக்கல் நேரத்துல வைத்தியர் வீட்டுல போய் நேரப்போக்குக்கு கொஞ்சம் கதைபேசிக்கிட்டு வர ப்போவாரு. பெரிய முத்தத்துல வாத்தியார கண்டதும் பொடி பொட்டெல்லாம் நாலுவாக்குல சிதறி ஓடிச்சி.
வைத்தியர்வீட்டு மூத்தம்மைகிட்ட, ஆனாலும் அக்கா! இவனெல்லாம் ஒரு வாத்தியானா? மனியன் இந்த அடியாஅடிப்பான்? புள்ள துடியா துடிச்சியான். ரண்டு குண்டியிலயும் கொழுக்கட்ட மாதிரி
செவ செவா வீங்கி போய் கெடக்கு.
பொன்னம்மா ஒனக்க பய ஒண்ணுஞ்செய்யாமலா அடிச்சிருப்பாரு! இதப்போட்டு பெரிசாக்காத. மூத்தம்ம ஒரு பெரியவெங்கல சங்கு நெறய காயத்திருமேனி எண்ணய குடுத்து, இதபோட்டு நல்லா தடவி விடு. ஒண்ணும் செய்யாது, எண்ணய வாங்கிக்கிட்டு வெளிய வந்த பொன்னம்ம, மங்களாவுக்க பெஞ்சில இருந்த மூத்த வாத்தியார கண்டும், பாக்காம விசுக்குவிசுக்குண்ணி போனாவ.
வைத்தியரும் வாத்தியாரும் அண்ணே தம்பி என ஊர் கதையை பேசிக்கிட்டிருக்கும்போது, அடுத்தவாரம் திங்கள்கிழமை காமராஜர் தேர்தல் பிரச்சாரத்துக்கு வாறத பற்றி சிலாகித்து பேசிக்கிட்டாவ.
காந்திஜி, நேரு,நேதாஜி, பட்டேல், திலஹர் ,வ.உ.சி, ராஜாஜி போன்றவர்கள் தலைவர்களாக இருந்தார்கள் என்றால் அவர்களுக்கு பின்னே வசதியான குடும்ப சூழலோ உயர் கல்வியோ வாய்த்திருந்தது. தனக்கென ஒரு குடும்பம், சொந்தம், நட்பு ,
ஏன்? பெற்றஅன்னையின் அரவணைப்பு கூட வேண்டாம் என பற்றற்ற ஞானியாக திகழ்ந்தவர் காமராஜர் .
நாடு முன்னேற முதல்தேவை அனைவர்க்கும் கல்வி, படிப்பதற்கு இடையூறாக உணவு, கட்டணம், தூரம் இருக்கக்கூடாது என, அத்தனை தடைகளையும் உடைத்து, குழந்தைகளை பள்ளிக்கு வரவழைத்த ஏழைபங்காளன். விவசாயம் செழிக்க அணைகள் கட்டி, புதிய கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் அமைத்து, மின்சார உற்பத்தியை பெருக்கி, கனரக தொழில்களை கொண்டுவந்து நூற்றாண்டு சாதனையை
எட்டே ஆண்டுகளில் செய்தமகான் ! என அவர் வாழ்கால சாதனையை
வர்ணித்தார் மூத்தவாத்தியார்.
மூத்தம்மை ரண்டுதட்டுப்பெட்டியில் சுடசுடகொல்லாங்கொட்டையும் வெங்கலகப்புல கருப்பட்டி காப்பியும் கொண்டு கொடுத்தாவ. ரண்டு பேரும் காப்பியை குடிச்சிக்கிட்டே பேச்சை தொடர்ந்தாவ. காமராஜர் ஊர் ஊராக
அம்பாசிடர் காரிலே சுற்றுப் பயணம் செய்தார். புதூர் ஆத்தங்கரையில் ஜனக்கூட்டம் பெருகியிருந்தது. பள்ளி மாணவர்களை சல்லிறோட்டின் இருப்பக்கத்திலும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டனர். சட்டையில் காமராஜர் படம் குண்டூசியால் குத்தப்பட்டிருந்தது. தாய்மார்களும் பெரியோர்களும் கூப்பிய கரத்தோடு பெருந்தலைவர் காமராஜருக்கு ஜே! கல்விக்கண் திறந்த காமராஜருக்குஜே! என்று பலமான கோஷம் வெளியானது.
காரிலிருந்து கதராடை அணிந்த தனது உயரமான சரீரத்தை கொண்டு சிரமப்பட்டு வெளியே இறங்கினார். இறங்கியதும் தோள் துண்டை லாவகமாக தோளில் போட்டுக் கொண்டு சிரித்த முகத்தோடு அனைவருக்கும் வணக்கம்தெரிவித்தார். பள்ளிப்பிள்ளைகளை வாஞ்சையோடு தடவி க்கொடுத்தார். பின்னர் காரில் ஏறியதும் கார் மெதுவாக ஊருக்குள் சென்றது. கூட்டம் காரின் பின்னே விரைந்தது.
கீழ கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு, கார் பெரிய முத்தத்தில் வந்து திரும்பி நின்றது. காமராஜர் மெதுவாக கீழே இறங்கினார். அலைச்சல்காரணமாக கால்கள் நீரடித்து வீங்கியிருந்தது. கருத்ததிருமேனி வெள்ளை கதராடை, வெள்ளை மனம், பூரித்த சிரிப்போடு மெதுவாக காமராஜ் நடந்து வருகிறார். கட்சியின் முன்னோடிகளும், ஊர்பெரியவர்களும், கதர் நூல்
சிட்டை மாலைகளை அணிந்து மகிழ்ந்தார்கள். வைத்தியர் வீட்டு சுவரில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களே வருக! வருக!! என வண்ணமையால் தீட்டப்பட்ட சார்ட் பேப்பர் பொருத்தப்பட்டிருந்தது. அலங்கார கொடிகள் மற்றும் டீப்லைட் கட்டப்பட்டிருந்தது. ஒருஸ்டாண்ட் மைக் வைக்கப்பட்டிருந்தது. இருநிமிடம் சுருக்கமாக பேசிவிட்டு நன்றி தெரிவித்து காரில் புறப்பட்டார். இறையவதாரம்ஒன்று மானிடர்களை சந்தித்து சென்ற மகிழ்ச்சி அனைவர் முகத்திலும் எதிரொலித்தது.
புதங்கிழமை காலையில் பள்ளிகொடத்துக்கு போச்சுல
புதூர்வாத்தியாரு அன்னா![அதோ] போறாருண்ணி முருகேசன் மெதுவாக சொன்னான். மடிச்சுகட்டின வெள்ளை வேட்டி, வெள்ளை அரக்கைச்சட்டை, கறுப்பு செருப்பு, தோளுல துண்டு, கறுப்பு காம்புக்கொட, எல்லாரும் வாய்மூடி மவுனியாகி, நடையின் வேகம் கூடிற்று. அப்பாத்துரை! ஏ! வாத்தியாரு நாவுருவலுக்கு (நாகர்கோவிலுக்கு) போயிருவாரு என்றதும், காலமாடன்விளைபக்கம் போய்கிட்டிருந்த வாத்தியாரு பை, குடை, எல்லாம் கீழேவச்சிகிட்டு கால் செருப்ப கழற்றி போட்டுக்கிட்டு, மேக்க பாத்தாரு. மேகக் கூட்டத்துக்குள்ள நிலவு தெரிவது போல, மரங்களின் ஊடே.
குறுங்கட்டி பொத்தை (வெள்ளீமலை) முருகன் கோவில் உச்சி வெள்ளை நிறத்தில்
தெரிந்தது. பயபக்தியோடு பாலசுப்ரமண்ய சாமியை கும்பிட்டுட்டு நடையை
தொடர்ந்தார். தோளுல துண்டும், கையில பையும், கறுப்பு கொடையும் எடுத்தாலே
வாத்தியார் டி.இ. ஓ ஆபிசுக்கு போவாருண்ணி கோரசாமி [குமாரசாமி] உறுதிப்படுத்தினான். கோரசாமி பேச்ச கேட்டதும்எல்லாருக்கும் தலப்பாரம் கொறஞ்சது
போலிருந்தது.
பள்ளிக் கொடத்த ஒரு சுத்து சுத்தி பார்த்துக்கிட்டு பேயோடுவாத்தியாருக்கிட்ட
ஏதொ, பேசிக்கிட்டு பரக்குன்னிலிருந்து நாகர்கோவிலிலுக்கு சூரப்பள்ளம்வழியா
போற பஸ்ஸ பிடிக்கபோனாரு.
தமிழும் ஆங்கிலமும் அட்சர பிழையின்றி வடிவமாக எழுதவும், அடிப்படை
கணிதஅறிவு , கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், வாய்ப்பாடு மனனம் செய்வதோடு, நீதி நூல்கள் படித்தல், இறைவணக்கம், உலக நீதி, கொன்றைவேந்தன்,
திருக்குறள், பழம் பாடல்கள், விஞ்ஞானம், சரித்திரம் என கற்றதும் பெற்றதும் பசுமரத்தாணிபோல மனதில்பதியவைக்க குருகுலக்கல்விபோல் வாத்தியார்களின் தன்னலம்பாரா உழைப்பை நினைத்துப் பார்த்து, காம்பவுண்ட் சுவரை பற்றி நின்ற அரிகோபாலின் கண்களுக்குமுன்னால் பப்ளிக்ஸ்கூல், மெட்ரிக்ஸ்கூல், சி பிஎஸ் இ,
கேந்திரவித்தியாலயா , ஐ எஸ் ஸி எனபள்ளி வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக காதுகிழிய சைரன்ஒலி எழுப்பியவாறு குழந்தைகளை பள்ளிக்கு கடத்திசென்றது. அரிகோபாலின் மருமகள் பேரன் சுரபி- யை ஸ்கூலுக்கு புறப்படவைக்க போராடிக்கொண்டிருந்தாள். ஷு, சாக்ஸ், டை, நிக்கர், சட்டை, ஐ.டி கார்டு அணிவித்து முடிப்பதுற்குள், ராஜகோபால் ஸ்கூல்பேக்கில் ஸ்னாக்ஸ்பாக்ஸ், லஞ்ச்பாக்ஸ், ஸ்பூண், பென்சில்பாக்ஸ், நோட்டு, புக், டவ்வல், எல்லாம் எடுத்து வைப்பதற்குள் வேன் சங்கொலி எழுப்பியது. எல்லாம் எடுத்துட்டு வேன்பக்கம் போனமருமகள், மாமா! வாட்டர்பாட்டில் வைக்கல. கிச்சனிலிருக்கு எடுத்துட்டுவாங்க என்றதும் விலைஉயர்ந்த வாட்டர்பாட்டிலை எடுத்துகொண்டு வந்து கொடுத்ததும் சுரபி வேனில்ஏறி மம்மி டாட்டா, தாத்தா டாட்டா சொல்லும்போது, அந்த சின்ன குழந்தைக்கு, இந்த மண்ணுக்கும், மண்சார்ந்த மொழி, இன மரபுகளின் வேரடி உறவுக்கும் டாட்டாசொல்லும் கல்வியை கற்க போகிறோம் என்பது புரிந்தா சொல்கிறது? அரிகோபால் ஈஸிசெயரில் அமர்ந்து கொண்டு ஏக்க பெரு மூச்சோடு பேரனிடம் கொடுத்த
வாட்டர்பாட்டிலையும், பதினொண்ணேகாலுக்கு சூரப்பள்ளம் பள்ளிக்கொடத்து மணியடித்ததும் ஓடிவந்து ஆற்றில் கவிழ்ந்து தண்ணீரை உறிஞ்சி குடிப்பதையும் ஒரேபுள்ளியில் இணைத்துப்பார்த்து பெருமூச்சு விட்டவாறு தனக்கு அடிப்படைக்கல்வியும், வாழ்வில் உயர்வையும் தந்த சூரப்பள்ளம் பள்ளிக்கொடத்தையும் நினைத்துப்பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டார்.
வாட்டர்பாட்டிலையும், பதினொண்ணேகாலுக்கு சூரப்பள்ளம் பள்ளிக்கொடத்து மணியடித்ததும் ஓடிவந்து ஆற்றில் கவிழ்ந்து தண்ணீரை உறிஞ்சி குடிப்பதையும் ஒரேபுள்ளியில் இணைத்துப்பார்த்து பெருமூச்சு விட்டவாறு தனக்கு அடிப்படைக்கல்வியும், வாழ்வில் உயர்வையும் தந்த சூரப்பள்ளம் பள்ளிக்கொடத்தையும் நினைத்துப்பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டார்.
பள்ளிக்கொடத்தின் ஓட்டுக்கூரை காங்க்ரீட்கூரையாக மாறியிருந்தது. முன்னால் மாணவர்கள் நட்டுவளர்த்த மரங்கள் காற்றை
ஏக்கபெருமூச்சாக வாரி இறைத்துக் கொண்டிருந்தது. ஐந்து ஆசிரியர்களை கொண்ட அரசுபள்ளியாக விளங்கியது, இன்று ஈராசிரியர் பள்ளியாக பொலிவிழந்து காணப்படுகிறது. இதே பள்ளியில்படித்து தாசில்தாராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற நாராயணப்பெருமாள் அவர்கள் எவ்வளவோ முயன்றும் பழயநிலை திரும்புவது கேள்விக்குறியாகவே உள்ளது. பெற்றோர் ஆசிரியர்சங்கத்தின் பங்களிப்பின்மூலம் ஆட்டோவில் மாணவர்களை அழைத்து வரும்போது, பல்வேறு பணம்கறக்கும் பள்ளிவேன்கள் பவுசாக சூரப்பள்ளம் பள்ளிக்கொடத்தையும், அங்குபடிக்கும் சொற்ப மாணவர்களையும் அலட்சியபார்வையை வீசி அனாயசமாக பறந்து கடந்து செல்கின்றது.
அன்புடன்
வைத்தியர்மகன்
வே. ஆறுமுகவேலப்பன்
12.12.2022



Good
ReplyDelete